புதிய மீன் மார்க்கெட் கட்டிடம்


புதிய மீன் மார்க்கெட் கட்டிடம்
x
தினத்தந்தி 22 Feb 2021 6:14 PM GMT (Updated: 22 Feb 2021 6:14 PM GMT)

புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னரில் புதிய மீன் மார்க்கெட் கட்டிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை, பிப்.23-
புதுக்கோட்டை நகராட்சி டி.வி.எஸ். கார்னர் பகுதியில் தேசிய மீன் வள மேம்பாட்டு வாரிய நிதியின் கீழ் ரூ.54 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மீன் அங்காடி கட்டிடம் மற்றும் திருவப்பூரில் ரூ.70.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்கா ஆகியவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். புதிதாக கட்டப்பட்ட மீன் மார்க்கெட்டில் 13 கடைகள் கட்டப்பட்டுள்ளதுடன், போதிய இடவசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட புதிய பூங்காவில் நடைபாதை, 8 வடிவ நடைபாதை, பேவர்பிளாக் நடைபாதை, யோகா மையம், சிறுவர் பூங்கா, பெரியவர் உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இப்பூங்கா பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்தார். நிகழ்ச்சிகளில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி, வேளாண் விற்பனை குழு தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச டேட்டா கார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், `கல்லூரி மாணவர்கள் இணைய வழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஏதுவாக உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 மாதங்களுக்கு விலையில்லா தரவு அட்டைகளை (டேட்டா கார்டு) வழங்க உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 45 கல்லூரிகளைச் சேர்ந்த 19,908 மாணவ-மாணவிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் 8 பேருக்கு ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிதியுதவித் தொகைக்கான காசோலைகளை அவர் வழங்கினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தபால் நிலைய கிளையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Next Story