3 மாதத்தில் ஆட்சிமாற்றம் நடக்கும்போது மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி


3 மாதத்தில் ஆட்சிமாற்றம் நடக்கும்போது  மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 22 Feb 2021 8:13 PM GMT (Updated: 22 Feb 2021 8:13 PM GMT)

3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. சார்பில் ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நேற்று அந்தியூர் தொகுதிக்கு உள்பட்ட பங்களாப்புதூர் புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அந்தியூர் என்றால் மாட்டுச்சந்தை, குதிரை சந்தைக்கு புகழ் பெற்றது. மாடு என்றால் செல்வம். குதிரை என்றால் கம்பீரம். செல்வமும், கம்பீரமும் கொண்ட அந்தியூரில் உங்களை சந்திக்கிறேன்.  மாட்டு சந்தை பல இடங்களில் நடக்கும். ஆனால் தென் இந்தியாவிலேயே பெரிய அளவிலான குதிரை சந்தை அந்தியூரில் மட்டும்தான் நடக்கிறது. சுல்தானியர்கள் ஆட்சி காலத்தில் குதிரைப்படை வீரர்கள் அந்தியூர் பகுதியை சுற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பவே வீரம் மிகுந்த பகுதி இது. வீரமும், துடிப்பும் மிக்க அந்தியூரில் உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை, தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். 
நிறைவேற்றப்படும்
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும். இதற்காக நான் என்னை அர்ப்பணிக்கிறேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். எனது உறுதிமொழியை ஏற்று என்மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள். 
3 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்போது உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். தி.மு.க. தலைமையில் அமையும் அணி தி.மு.க. என்ற ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல், மக்கள் ஆட்சியாக இருக்கும்.
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. அமைச்சர் தங்கமணி, தனது தொகுதிக்காக அதிக நிதி ஒதுக்கியதாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. குமாரபாளையம் தொகுதியில் அதிக நிதி ஒதுக்கியும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. 
அதிகநிதி
இதுபோல் முதல்-அமைச்சர் பழனிசாமி அவரது சொந்த மாவட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளார். அமைச்சர் வேலுமணி கோவை பகுதிக்கு மட்டும்தான் அதிக நிதி ஒதுக்கி இருக்கிறார். அமைச்சர் சம்பத் மீது அவர்களின் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் தொகுதிக்கு வரவேண்டிய நிதியை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். 
கேட்காத இடத்தில் பாலம், போட்ட ரோட்டையே திருப்பி போடுவது என்று பொய்க்கணக்கு போடும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். 
பொல்லான் மணிமண்டபம்
முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு திடீர் என்று அருந்ததியின மக்கள் மீது அக்கறை ஏற்பட்டு உள்ளது. மாவீரன் பொல்லானுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். கடந்த 9-2-2019 அன்று சங்ககிரியில் நடந்த மாநாட்டில் மாவீரன் பொல்லானுக்கு நினைவு இல்லம், மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தது இந்த ஸ்டாலின். 
பழனிசாமிக்கு அக்கறை இருந்து இருந்தால், அப்போதே அறிவித்து மணிமண்டபத்தை கட்டி இருக்கலாம். ஆனால், தேர்தலுக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் அதை செயல்படுத்த முடியாது என்பதால் சும்மா சொல்லி வைப்போம் என்று அறிவித்து இருக்கிறார்.
கவலைகள் தீரும்
அருந்ததியின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள் இடஒதுக்கீடு சட்டத்தை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தவன் என்ற பெருமையில் உங்கள் முன் தலைநிமிர்ந்து நிற்கிறேன். மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் இன்று முன்னேறி வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இடஒதுக்கீடுதான். 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை தாக்கல் செய்தேன். கடந்த 10 ஆண்டுகளில் அருந்ததியர் மக்களின் வாழ்க்கை ஒளியேற்றி வைக்கப்பட்டு உள்ளது.  மக்கள் கிராம சபை கூட்டங்களில் சகோதரிகள் வந்து, கலைஞரால் நான் படித்தேன் என்று கூறும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கலைஞரின் மகன். 
மகன்தந்தைக்கு  ஆற்றும் உதவி இவன்தந்தை 
என் நோற்றான் கொல் எனும் சொல்- என்ற குறளின் படி, எனது தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகனாக நான் இருப்பேன் என்று உறுதி ஏற்று இருக்கிறேன்.
வாருங்கள் நாம் களம் கண்ட தமிழகத்தை, நமக்கான தமிழகத்தை உருவாக்குவோம். கழக ஆட்சி வரும் கவலைகள் அனைத்தும் தீரும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story