தாளவாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக தாய்- மகன் உயிர் தப்பினர்


தாளவாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக தாய்- மகன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 22 Feb 2021 8:41 PM GMT (Updated: 22 Feb 2021 8:41 PM GMT)

தாளவாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தாய்- மகன் உயிர் தப்பினர்.

தாளவாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது/ அதிர்ஷ்டவசமாக தாய்- மகன் உயிர் தப்பினர்.
தொகுப்பு வீடுகள் 
தாளவாடி அருகே உள்ள கிராமம் இரியபுரம். இந்த கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டன.
இந்த தொகுப்பு வீடுகளின் கான்கிரீட் மேற்கூரைகள் பெயர்ந்து கீழே விழுந்ததுடன், எப்போது வேண்டுமானாலும் வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள கம்பிகள் எலும்புக்கூடு போல் காட்சி அளித்ததால், தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் உள்ள ஒரு தொகுப்பு வீட்டில் அந்த பகுதிைய சேர்ந்த தொழிலாளியான துளசி (வயது 45) என்ற பெண்ணும், அவருடைய மகன் நரசிம்மனும் (25) வசித்து வருகிறார்கள். 
இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் வீட்டின் வெளிப்புறத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய வீடு  திடீரென இடிந்து விழுந்தது. தாயும், மகனும் வீட்டுக்கு வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 2 பேரும் உயிர் தப்பினர். 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் இதுவரை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.  தற்போது ஒரு வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதேபோல் மேலும் 15 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இனியாவது இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.  

Next Story