நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை


நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை
x

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தீவைத்து எரித்து கொன்று விட்டு இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

அச்சரப்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், அச்சரப்பாக்கம் அருகே இரும்புலி கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஜீவா (37). இவர்களுக்கு கிருபாவதி என்ற (19) மகள் உண்டு.

கிருபாவதி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதனிடையே பார்த்திபன் அவரது மனைவி ஜீவாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பார்த்திபனுக்கும் அவரது மனைவி ஜீவாவிற்கும் வழக்கம்போல் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் வீட்டிலேயே தூங்க சென்று விட்டனர்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை பார்த்திபன் எழுந்து பார்த்தபோது, மனைவி ஜீவா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத பார்த்திபன் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து ஜீவா மீது ஊற்றி தீ வைத்து உயிரோடு கொளுத்தினார்.

தீ வைத்ததில் மனைவி சாவு

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கிருபாவதி அதை தடுக்க வந்தபோது அவர் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். கண் முன்னே மனைவியும், மகளும் உயிரோடு எரிவதை கண்ட பார்த்திபன் பின்னர், தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அப்போது அவர்களின் அலறல் சத்தம் கேட்கவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் எரிந்ததில் ஜீவா பரிதாபமாக இறந்து கரிக்கட்டையானார்.

இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனையும், அவரது மகள் கிருபாவதியையும் மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து கிடந்த ஜீவாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளுக்கு சிகிச்சை

இதனிடையே பார்த்திபனும், அவரது மகள் கிருபாவதியும் 70 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் அடைந்து இருந்ததால், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பார்த்திபனுக்கும் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவர் உயிரிழந்தார். கிருபாவதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை செய்து வருகிறார். சந்தேகத் தீ கணவன் மனைவி தீக்கிரையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story