வரத்து குறைவு காரணமாக கறிவேப்பிலை விலை உயர்வு


வரத்து குறைவு காரணமாக கறிவேப்பிலை விலை உயர்வு
x
தினத்தந்தி 23 Feb 2021 6:19 PM GMT (Updated: 23 Feb 2021 6:19 PM GMT)

உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக கறிவேப்பிலை விலை அதிகரித்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உடுமலை:
உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக கறிவேப்பிலை விலை அதிகரித்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கறிவேப்பிலை
மக்களுக்கான உணவு வகையில் சாம்பார், ரசம் உள்ளிட்டவற்றிற்கு தேவைப்படுவது கறிவேப்பிலை. உடுமலையில் உள்ள உழவர் சந்தைக்கு சுற்றுப்பகுதிகளில் இருந்து, பெரிய இலைகளாக இருக்கும் உள்ளூர் கறிவேப்பிலை விற்பனைக்கு வருவது வழக்கம். 
கடந்த மாதம் தினசரி சுமார் 80 கிலோ வரை சந்தைக்கு கறிவேப்பிலை வரத்து இருந்தது. அதன் பின்னர் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 20 நாட்களாக கறிவேப்பிலை வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. நேற்று சுமார் 10 கிலோ மட்டுமே விற்பனைக்கு வந்தது. 
விலை உயர்வு
ஏற்கனவே கிலோ ரூ.50 மற்றும் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கறிவேப்பிலை தற்போது வரத்து குறைவு காரணமாக நேற்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
பொதுமக்களுக்கு ஒரு சிறிய கட்டு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போதும் அதே விலைக்கு விற்கப்பட்டாலும் அளவு குறைத்து கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கமிஷன் மண்டிகள்
உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் உள்ளன. இந்த கமிஷன் மண்டிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கறிவேப்பிலை வருகிறது. இந்த கறிவேப்பிலையின் இலைகள் சிறியதாகவும், வாசனையுடனும் இருக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து கறிவேப்பிலை முன்பு தினசரி சுமார் 300 கிலோ வரை வந்து கொண்டிருந்தது. அதை சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். 
முன்பு கிலோ ரூ.80 முதல் ரூ.90வரை இருந்தது. தற்போது வரத்து குறைந்து 150 கிலோதான் வருகிறது. வரத்து குறைந்ததால் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த கறிவேப்பிலை மொத்த விலையாக கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story