சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது


சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 1:46 PM GMT (Updated: 24 Feb 2021 1:46 PM GMT)

சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது.

சென்னை, 

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர் மீது சென்னை திருவான்மியூர் வால்மிகி நகரைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (70) என்பவர் அடையாறு துணை கமிஷனர் சரக சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

மணிகண்டன் தன்னை தொழில் அதிபர் என்று என்னிடம் ஆன்லைன் வாயிலாக அறிமுகப்படுத்தி கொண்டார். தன்னிடம் பண முதலீடு செய்தால், முதலீட்டு தொகை இரட்டிப்பாக திருப்பித்தரப்படும் என்று மணிகண்டன் ஆசைகாட்டினார். அவரது பேச்சை நம்பி, அவரது வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் முதலீட்டு தொகையாக நான் செலுத்தினேன். ஆனால் மணிகண்டன் என்னை ஏமாற்றி விட்டார். பண மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுபோல திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரும், தன்னிடம் ரூ.25 ஆயிரம் ஏமாற்றி விட்டதாக மணிகண்டன் மீது புகார் கொடுத்தார். இந்த புகார் மனுக்கள் அடிப்படையில் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.

Next Story