புழல் அருகே பரிதாபம்: கன்டெய்னர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி


புழல் அருகே பரிதாபம்: கன்டெய்னர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2021 4:02 PM GMT (Updated: 24 Feb 2021 4:02 PM GMT)

புழல் அருகே கன்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

செங்குன்றம், 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 18). இவர் சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். புழல் போலீஸ் நிலையம் அருகே ஜி.என்.டி.சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்த முயன்றார். அப்போது அவர் நிலைத்தடுமாறியதில் கன்டெய்னர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

பரிதாப சாவு

இதில் உடலில் பலத்த காயம் அடைந்த சூரியநாராயணன் சம்பவ இடத்திலேயே துடி,துடித்து பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான மாணவர் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாதவரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Next Story