நாகர்கோவிலில் தட்டு ஏந்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்


நாகர்கோவிலில் தட்டு ஏந்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 7:47 PM GMT (Updated: 25 Feb 2021 7:47 PM GMT)

நாகர்கோவிலில் நேற்று 4-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கைகளில் தட்டுகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் நேற்று 4-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கைகளில் தட்டுகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் மாநிலந் தழுவிய காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை பணியாளருக்கு ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
தட்டுகளை ஏந்தி போராட்டம்
நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, பொருளாளர் சரோஜினி உள்பட 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறும், தலையை துண்டு மற்றும் சேலையால் மூடியபடியும், சாலை ஓரங்களில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைகளில் தட்டுகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story