5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திப்பு


5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைப்பு தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Feb 2021 8:07 PM GMT (Updated: 26 Feb 2021 8:07 PM GMT)

5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அவர்களை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி சந்தித்து பேசினார்.

5-வது நாளாக தொடர்ந்த அங்கன்வாடி பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அவர்களை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி சந்தித்து பேசினார்.
காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 22-ந் தேதி ஈரோடு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்த நூற்றுக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்களும், உதவியாளர்களும் ஈடுபட்டார்கள். அவர்கள் இரவு, பகலாக தங்கியிருந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். அவர்களது போராட்டம் 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
ஒத்திவைப்பு
போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் மணிமாலை தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி போராட்ட இடத்துக்கு நேரில் சென்று அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து, ‘உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை கருங்கல்பாளையம் மக்கள் சேவை மையத்தின் நிறுவன தலைவர் கேபிள் ஆர்.செந்தில்குமார் செய்திருந்தார். இந்தநிலையில் நேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது போராட்டத்தை முடித்துகொண்டனர்.

Next Story