சத்யா காலனியில் புழுதி பறக்கிறது குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி


சத்யா காலனியில் புழுதி பறக்கிறது குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 26 Feb 2021 8:08 PM GMT (Updated: 26 Feb 2021 8:08 PM GMT)

திருப்பூர் சத்யா காலனியில் புழுதி பறக்கும் குண்டும், குழியுமான சாலையால் மக்கள் கடும்சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

திருப்பூர்
திருப்பூர் சத்யா காலனியில் புழுதி பறக்கும் குண்டும், குழியுமான சாலையால் மக்கள் கடும்சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
பாதாள சாக்கடை திட்டம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் மாநகராட்சி  மண்டலங்களில் ரூ.604 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாநகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் பிரதான ரோடுகள் மற்றும் வீதிகளை தோண்டி பிரமாண்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை, சத்யா காலனி பகுதியில் மெயின் வீதி மற்றும் 10 வீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வீதிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. குழிகள் மூடப்பட்டன. ஆனால் இதுவரை சாலைகள் அமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. தார் தளம் அமைக்காமல் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. வீதிகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. பலர் விபத்தில் சிக்கியுள்ளனர்.
புழுதி பறப்பதால் சிரமம்
இதுகுறித்து சத்யா காலனியை சேர்ந்த வெங்கடேஷ் கூறும்போது, எங்கள் பகுதியில் 10 வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்துக்கு குழி தோண்டி குழாய் பதிக்கப்பட்டு 4 மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. தூசு பறப்பதால் சாலையோரம் உள்ள கடைகள், வீடுகளில் அதிக தூசு படிந்து பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். நீண்ட நாட்கள் ஆகியும் தார் சாலை அமைக்காமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. தினமும் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்” என்றார்.
அதே பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கமல்ஹாசன் கூறும்போது, “சத்யா காலனியில் வீதியில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியவில்லை. கடந்த 4 மாதமாக இந்த சிரமத்தை நாங்கள் தினமும் அனுபவித்து வருகிறோம். இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சாலையில் இருந்து புழுதி பறப்பதால் சிரமமாக உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் வாகனத்தில் சென்றால் உடல் வலி ஏற்படுகிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
4 மாதங்களாக குண்டும், குழியுமான சாலையால் சிரமத்தை சந்திக்கும் சத்யா காலனி பகுதியில் தார் தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பிரச்சினைகளை அதிகாரிகள் கவனிப் பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Next Story