பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர் கைது
போடியில், நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி:
போடி பழைய பஸ்நிலையம் பகுதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது ஒரு சொகுசு கார் மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது காரில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து காரை சோதனை போட்டனர்.
அப்போது காரில் பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
கைது
இதையடுத்து அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கம்பத்தை சேர்ந்த அஜித் ரகுமான்(வயது 24), ஆனந்தன்(24), ராசிங்காபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(25), கூடலூரை சேர்ந்த ஜெயபிரபு(35), போடியை சேர்ந்த விக்னேஷ்(26) என்பது தெரிய வந்தது.
இவர்களில் அஜித்ரகுமான், ஆனந்தன், ராஜேஷ், ஜெயபிரபு ஆகியோர் உத்தமபாளையத்தை சேர்ந்த வக்கீல் ரஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார். மேலும் அவர்கள் ைவத்திருந்த ஆயுதங்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
பயங்கர ஆயுதங்களுடன் 5 பேரும் காரில் வந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story