மாளியப்பட்டு, கீழ்விலாச்சூர் கிராமங்களில் மாடு விடும் விழா


மாளியப்பட்டு, கீழ்விலாச்சூர் கிராமங்களில் மாடு விடும் விழா
x
தினத்தந்தி 27 Feb 2021 6:25 PM GMT (Updated: 27 Feb 2021 6:25 PM GMT)

கே.வி.குப்பம் அருகே மாளியப்பட்டு, கீழ்விலாச்சூர் கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி மொத்தம் 23 பேர் காயம் அடைந்தனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மாளியப்பட்டு, கீழ்விலாச்சூர் கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் முட்டி மொத்தம் 23 பேர் காயம் அடைந்தனர். 

போலீசார் தடியடி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மாளியப்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. அதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 139 மாடுகள் பங்கேற்றன. 

தோசாலம்மன் கோவில் அருகில் வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. அதில் மாடுகள் முட்டி 15 பேர் காயம் அடைந்தனர். 

மாடுகள் ஓடும் பாதையின் குறுக்கே இடையூறாக நின்றிருந்த இளைஞர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். 2 மாடுகள் ஓடியபோது தடுமாறி விழுந்து காயம் அடைந்தன. 

குறிப்பிட்ட தூரத்தை வேகமாக ஓடி கடந்த மாட்டுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 777-ம், 2-வது பரிசு ரூ.1 லட்சம், 3-வது பரிசு ரூ.75 ஆயிரம் உள்பட மொத்தம் 51 பரிசுகள் வழங்கப்பட்டன. காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பனமடங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

4 மாடுகள் காயம்

அதேபோல் கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்விலாச்சூர் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் 174 மாடுகள் பங்கேற்றன. அதில் காளைகள் முட்டி 8 பேர் காயம் அடைந்தனர். 4 மாடுகளும் காயம் அடைந்தன. அறிவிக்கப்பட்ட படி பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story