26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று


26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Feb 2021 4:24 AM GMT (Updated: 28 Feb 2021 4:24 AM GMT)

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 257 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 187 பேரும், கோவையில் 40 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், திருவள்ளூரில் 35 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

5 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 51 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 232 ஆண்களும், 3 லட்சத்து 36 ஆயிரத்து 796 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 31 ஆயிரத்து 144 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 202 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அந்தவகையில் சென்னையில் 2 பேரும், தஞ்சாவூர், திருவள்ளூர், வேலூரில் தலா ஒருவர் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,493 பேர் உயிரிழந்துள்ளனர்.

491 பேர் பூரண குணம்

கொரோனா பாதிப்பில் இருந்து 491 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 191 பேரும், கோவையில் 44 பேரும், செங்கல்பட்டில் 54 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 534 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 36 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story