தூத்துக்குடி மாவட்டத்தில் 242 வாக்குச்சாவடிக்ள் பதற்றமானவை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் 242 வாக்குச்சாவடிக்ள் பதற்றமானவை கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2021 11:28 AM GMT (Updated: 28 Feb 2021 11:28 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
வாக்காளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 7 லட்சத்து 24 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 57 ஆயிரத்து 151 பெண் வாக்காளர்கள், 164 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 81 ஆயிரத்து 799 வாக்காளர்கள் உள்ளனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. 2016-17, 2017-18-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்கள் வாக்காளர்களாக சேர்ந்து உள்ளார்களா? என்பது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விசாரித்து வாக்காளர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்து வந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வேட்பு மனுதாக்கல் கடைசிநாள் வரை இந்த சேர்க்கை பணிகள் நடைபெறும்.
வாக்குச்சாவடிகள்
மாவட்டத்தில் 1603 வாக்குச்சாவடிகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 1050-க்கு அதிகமாக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி புதிதாக 494 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடியில் முககவசம், கைகழுவும் திரவம் வைக்கவும், அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பி.டபிள்யூ.டி செயலி மூலம் தெரிவித்தால், அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
242 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 10 ஆயிரத்து 604 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
எந்திரங்கள்
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பெல் என்ஜினீயர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 719 வாக்குப்பதிவு எந்திரம், 3 ஆயிரத்து 644 வாக்குச்சீட்டு பொருத்தும் எந்திரம், 2 ஆயிரத்து 922 வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு காண்பிக்கும் எந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இருப்பதால், அரசியல் கட்சியினருக்கு நடத்தை விதிகள் குறித்து விளக்கி கூறப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சுவர்களில் கட்சி விளம்பரங்களை அகற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தனியார் நிறுவனங்களில் கட்சி விளம்பரங்கள் இருந்தால், அதனை அகற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கட்டுப்பாட்டு அறை
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்றால், அதனை பிடித்து விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம். ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினர் பிரசாரம் மற்றும் விளம்பரங்கள் வைப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு 1950 என்ற எண் உள்ளது. இதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். சீவிஜில் செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வேட்புமனுக்கள் தாக்கலின் போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story