தொப்பூர் கணவாயில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ


தொப்பூர் கணவாயில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீ
x
தினத்தந்தி 28 Feb 2021 6:57 PM GMT (Updated: 28 Feb 2021 6:58 PM GMT)

தொப்பூர் கணவாயில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரியில் திடீர் தீப்பிடித்து கொண்டது.

நல்லம்பள்ளி,

கோவில்பட்டியில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்திற்கு தீப்பெட்டி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக வழியாக நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. 

கட்டமேடு அருகே வந்தபோது  லாரியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. லாரிக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சம்பந்தப்பட்ட லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, டிரைவர் லாரியை, சாலை ஓரமாக நிறுத்தினார். பின்னர் அவர்கள் வாகனங்களில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர், தர்மபுரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். 

தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story