பரமத்திவேலூர் அருகே மொபட்- கார் மோதல்; பெண் பலி கணவர் படுகாயம்


பரமத்திவேலூர் அருகே மொபட்- கார் மோதல்; பெண் பலி கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2021 10:42 PM GMT (Updated: 4 March 2021 10:44 PM GMT)

பரமத்திவேலூர் அருேக மொபட்- கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள மறவாபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (50). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மொபட்டில் வீட்டிற்கு செல்ல நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது பெங்களூரு நோக்கி சென்ற காரும் ராஜேந்திரன் ஓட்டிச்சென்ற மொபட்டும எதிர்பாராதவிதமாக  மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டில் வந்த ராஜேந்திரன், மல்லிகா ஆகிேயார் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 

பெண் பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் மல்லிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் திண்டுக்கல்லில் இருந்து காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story