மின்சாரம் தாக்கி தொழிலாளி மாடு சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி மாடு சாவு
x
தினத்தந்தி 5 March 2021 6:08 PM GMT (Updated: 5 March 2021 6:08 PM GMT)

பேரளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் மாடும் இறந்்தது.

நன்னிலம்:
பேரளம் அருகே  மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும்  மாடும் இறந்்தது. 
மின்சாரம் தாக்கியது
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள களக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசெல்வம்(வயது56). கூலித்தொழிலாளி. நேற்று அவர் அந்தபகுதியில் உள்ள ஒரு வயலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ராம்குமாருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று மின்கம்பத்தில் கட்டப்பட்ட  கயிற்றுடன் மேய்ந்து கொண்டு இருந்தது. திடீரென மாட்டின் கயிறு சிக்கி கொண்டது. இதனை பார்த்த ஆரோக்கியசெல்வம் மாட்டை காப்பாற்றுவதற்காக மாட்டின் கயிறை இழுத்துள்ளார். 
அப்போது மின்கம்பத்தில் உள்ள மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆரோக்கியசெல்வம் பரிதாபமாக இறந்தார். அதே இடத்தில் மின்சாரம் தாக்கி மாடும் இறந்தது. மாட்டின்மேலே ஆரோக்கியசெல்வம் இறந்துகிடந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. 
பிரேதபரிசோதனை 
தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  ஆரோக்கிய செல்வத்தின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மாட்டுக்கு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மாடும், தொழிலாளியும் ஒரே நேரத்தில் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story