ஆவின் டிரைவரை காரில் கடத்தி தாக்குதல்


ஆவின் டிரைவரை காரில் கடத்தி தாக்குதல்
x
தினத்தந்தி 5 March 2021 7:59 PM GMT (Updated: 5 March 2021 7:59 PM GMT)

ஆவின் டிரைவரை காரில் கடத்தி தாக்குதல்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவர் புதுக்கோட்டை ஆவினில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் புதுக்கோட்டையை சேர்ந்த சுசீலா என்பவரிடம் நகை அடகு வியாபாரம் தொடர்பாக ரூ.3 லட்சம் வாங்கியுள்ளார். சுசீலா நகையை அடகுக்கு வாங்கி பணம் கொடுப்பது மற்றும் விற்பதில் புரோக்கராக இருந்து வந்துள்ளார்.
 இந்தநிலையில் நடராஜனிடம் கொடுத்த ரூ.3 லட்சத்தை சுசீலா திருப்பி கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவு திருக்கோகர்ணம் பகுதியில் ஆவின் பால் பூத் அருகே நின்று கொண்டிருந்த நடராஜனை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கியது. மேலும் மறுநாள் காலையில் தான் அவரை விட்டதாக கூறப்படுகிறது.
ஒருவர் கைது
இதற்கிடையே நடராஜனின் மனைவி தனது கணவரை காணவில்லை என திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது  கடத்தப்பட்ட நடராஜன் வீடு திரும்பினார். அவரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சுசீலா, கார்த்திகேயன், முரளி, மணிகண்டன், தேவா மற்றும் சிலர் சேர்ந்து தன்னை காரில் கடத்தி சென்று தாக்கியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குருநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய வாசு என்பவரை கைது செய்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவின் டிரைவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story