பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; மர்மநபருக்கு வலைவீச்சு
நெல்லையில் மோட்டார்சைக்கிளி்ல் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை, மார்ச்:
நெல்லை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பறிக்க முயற்சி
நெல்லை அருகே வெள்ளாளன்குளம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருடைய மனைவி விஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக் கொண்டு தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அவர்கள் 2 பேரும் வெள்ளாளன்குளம் விலக்கு அருகே சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் திடீரென்று விஜியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார்.
மர்மநபருக்கு வலைவீச்சு
உடனே சுதாரித்து கொண்ட விஜி தனது சங்கிலியை இறுக பிடிக்க முயன்றதில், அது அறுந்து அங்குள்ள முள்வேலியில் விழுந்தது. இதையடுத்து அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதற்கிடையே தனது தங்க சங்கிலி மாயமானதால் அது திருடு போனதாக கருதிய விஜி, சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் நேற்று காலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முள்வேலியில் விஜியின் தங்க சங்கிலி அறுந்து கிடந்ததை பார்த்த போலீசார், அதனை மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story