தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை


தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2021 9:26 PM GMT (Updated: 5 March 2021 9:26 PM GMT)

தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு
தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் தள்ளுபடி
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் ஆதாரவிலை அறிவிக்க வேண்டும். பால் லிட்டருக்கு ரூ.100 வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். எரிவாயு குழாய் பதிப்பை விவசாய நிலங்களில் அமைக்கக்கூடாது.
ஏற்கனவே அமைத்த உயர்மின் கோபுர பாதிப்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன், கால்நடை கடன், பண்ணை சாரா கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி மாதம் 26-ந்தேதி வரை, விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வாங்கிய நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பாசன சபைக்கு தேர்தல்
எட்டு வழிச்சாலை திட்டத்தையும், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு வாரியத்தை ஈரோடு மற்றும் ராசிபுரம் பகுதியில் அமைக்க வேண்டும். இலவச மின்சாரம் தொடர உத்திரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பாசன சபைக்கும் முறையே தேர்தல் நடத்த வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கோரிக்கைளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Next Story