அரசியல் கட்சி சின்னங்களுடன் விற்பனைக்கு வந்த சேலைகள்


அரசியல் கட்சி சின்னங்களுடன் விற்பனைக்கு வந்த சேலைகள்
x
தினத்தந்தி 10 March 2021 3:44 AM GMT (Updated: 10 March 2021 3:49 AM GMT)

கோவைக்கு அரசியல் கட்சி சின்னங்களுடன் விற்பனைக்கு வந்த சேலைகள்.

கோவை,

தமிழகத்தில் ஜனநாயக திருவிழாவான சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. கூட்டணி அமைத்து தி.மு.க., அ.தி.மு.க. பலப்பரீட்சையில் இறங்கியுள்ளது. 

இதுதவிர கமல்ஹாசன் தலைமையில் மற்றொரு கூட்டணி களம் காண்கிறது. மேலும் சில கட்சிகள் மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.
கட்சிகள் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டவாறு உள்ளன. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களை நேரில் சந்தித்தது வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

 மேலும் சமூக வலைதளங்களில் தங்கள் கட்சியை ஆதரித்தும், எதிர் கட்சிகளை வெளுத்து வாங்கியும் பிரசாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் தொண்டர்கள் தங்கள் கட்சி சின்னத்தை தெரியப்படுத்தும் விதமாக கரை வேட்டியுடன் பிசியாக வலம் வருகிறார்கள். 

பெண்கள் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்தும், மோதிரம், கம்மல், மூக்குத்தி, அணிந்தும் ஒருபுறம் கலக்கி வருகிறார்கள். குறைவான நாட்களே உள்ளதால் தேர்தல் ஜுரம் அதிகமாகி வருகிறது. கோவையில் உள்ள கடைகளில் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட வேட்டி, சேலை, டி-சர்ட், குடை, தொப்பி, பேட்ஜ், பேனா உள்பட அனைத்துவிதமாக பொருட்களும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் கூறியதாவது:- 

கடந்த 45 ஆண்டுகளாக கட்சி கொடி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். தமிழகத்தை தவிர கேரளாவில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தான் ஆர்டர்கள் குவியும்.

 அப்போது இரவும் பகலுமாக கட்சி கொடி, பேனர், சேலை, வேட்டிகளை தயார் செய்து அனுப்பி வைப்போம். தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுர்கள் பிரசாரம் செய்யும்போது வேட்டி, சேலைகள், கொடி, பேனர், குடை உள்ளிட்ட பொருட்களுக்கு ஆர்டர்கள் அதிகம் வரும். 

கேரளாவில் இருந்து நேரில் அல்லது போனில் ஆர்டர்கள் கொடுப்பார்கள். அதற்கு தகுந்தவாறு கட்சி பொருகளை அனுப்பி வைப்போம்.
ஒரு சேலையின் விலை ரூ.145-க்கும், ஒரு வேட்டியின் விலை ரூ.140-க்கும் விற்பனை செய்கிறோம். 

இந்தமுறை பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதால் ஆர்டர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story