சீறிப்பாய்ந்த காளைகள்; 5 பேர் காயம்


சீறிப்பாய்ந்த காளைகள்; 5 பேர் காயம்
x
தினத்தந்தி 12 March 2021 8:32 PM GMT (Updated: 12 March 2021 8:32 PM GMT)

திருப்பத்தூர் அருகே நெடுமரம்புதூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

 திருப்பத்தூர் அருகே நெடுமரம்புதூர் பகுதியில் நேற்று அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

திருப்பத்தூர் அருகே நெடுமரம்புதூரில் ஆண்டுதோறும் வெள்ளாளக்கருப்பர் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புதூர் கிராமத்தினர் செய்து வந்தனர். மஞ்சுவிரட்டு நடைபெறும் இடத்தில் கேலரி அமைத்தல், மேடை அமைத்தல், அதிகாரிகள் அமர்வதற்கான மேடை அமைத்தல், கழிப்பறை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த மஞ்சுவிரட்டுக்கு வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அனுமதி வழங்கிய நிலையில், மாவட்ட நிர்வாகம், உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என கூறி கிராமத்தினருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

5 பேர் காயம்
இதனையடுத்து நேற்று கிராமத்தினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் வயல்பகுதிகளில் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.
இதில் ஏராளமான வாலிபர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர். மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அதை ஆவலுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் மாடு முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மஞ்சுவிரட்டை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

Next Story