100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் போட்டி


100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 14 March 2021 5:29 PM GMT (Updated: 14 March 2021 5:29 PM GMT)

சிதம்பரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்தார்.

அண்ணாமலைநகர், 

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிதம்பரத்தில் மாரத்தான்  போட்டி நடந்தது. இதற்கு சப்- கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் முன்னிலை வகித்தார். 
சிறப்பு  அழைப்பாளராக  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிதம்பரம் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட இந்த மாரத்தான் போட்டி நான்கு முக்கிய வீதிகள், பஸ் நிலையம், காந்தி சிலை வழியாக சென்று அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் முடிவடைந்தது.

கலைநிகழ்ச்சி

 இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர் செந்தில்வேலன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆணையாளர் அஜிதாபேகம், சிதம்பரம் தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story