பெருந்துறை ெதாகுதியில் சீட் ஒதுக்க மறுத்ததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக மனு தாக்கல்- யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி


பெருந்துறை ெதாகுதியில் சீட் ஒதுக்க மறுத்ததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக மனு தாக்கல்- யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி
x
தினத்தந்தி 18 March 2021 11:11 PM GMT (Updated: 18 March 2021 11:11 PM GMT)

அ.தி.மு.க.வில் சீட் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தொகுதிக்கு யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி அளித்து உள்ளார்.

ஈரோடு
அ.தி.மு.க.வில் சீட் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., தொகுதிக்கு யார் வேண்டும் என மக்கள் முடிவு செய்யட்டும் என்று பேட்டி அளித்து உள்ளார்.
பெருந்துறை எம்.எல்.ஏ.
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே மாவட்டமாக ஈரோடு இருந்தது. அப்போது அமைச்சராக இருந்த தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈரோடு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தார்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையுடன் உலா வந்த அவர் மீண்டும் 3-வது முறையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.
சுயேச்சையாக மனுதாக்கல்
ஆனால் வேட்பாளர் அறிவிப்பின்போது பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டாலும் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னையில் கட்சி தலைமையை அணுகி முறையிட்டார். கட்சிக்கு உண்மையாக இருப்பதாக பேட்டியும் அளித்தார். இந்த நிலையில், பெருந்துறை தொகுதியின் சுயேச்சை வேட்பாளராக தோப்பு என்.டி.வெங்கடாசலம் நேற்று மனுதாக்கல் செய்தார்.
ஆளும்கட்சியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த அவர் கட்சியின் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை அவர் அளித்தார்.
வளர்ச்சி
பின்னர் அவரது ஆதரவாளர்களுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் எம்.எல்.ஏ.வாக இருந்த 10 ஆண்டுகளில் கட்சிக்கும், மக்களுக்கும் எதிராக எந்த தவறும் செய்யவில்லை. பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்திருக்கிறேன். நான் கொண்டு வந்துள்ள திட்டங்களால் பெருந்துறை எந்த அளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போது கட்சியில் இருந்து எனக்கு போட்டியிட சீட் மறுக்கப்பட்டாலும், என் மீது அன்பு கொண்ட தொகுதி மக்கள் அவர்களாக முன்வந்து நான் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கட்சி பேதமின்றி, எதிர்க்கட்சியினர் கூட நான் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
கொடிவேரி திட்டம்
நான் எத்தனையோ திட்டங்களை இந்த மக்களுக்காக நிறைவேற்றி இருந்தாலும், எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான, உளப்பூர்வமாக நிறைவேற்றியே தீரவேண்டும் என்று நான் சவாலாக எடுத்துக்கொண்ட திட்டம் கொடிவேரி -பெருந்துறை குடிநீர் திட்டம். ஏன் இந்த திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று நான் தீவிரமாக இயங்கினேன்?. பெருந்துறை தொகுதியில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை கழிவுகளால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருக்கிறது. 
மக்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று கொடிவேரி திட்டத்தை கையில் எடுத்தேன். தமிழக முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதாவின் ஆசியுடன் அந்த பணி தொடங்கப்பட்டது.
இடையூறுகள்
ஆனால், எளிதில் அந்த திட்டப்பணிகளை செய்ய முடியவில்லை. ஆளும் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ.வான எனக்கே எத்தனை இடையூறுகள் தந்தனர். இந்த பணியை நான் வெற்றிகரமாக முடித்து விடக்கூடாது என்று, இந்த திட்டம் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் திட்டம் என்பதைக்கூட பார்க்காமல் சிரமப்படுத்தினார்கள். அவை அத்தனையையும் தனியாக நின்று சமாளித்து, 70 சதவீதம் பணிகள் முடித்து விட்டேன். இன்னும் 30 சதவீதம் பணிகளை முடித்து, பெருந்துறை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கொடிவேரி திட்ட தண்ணீரை குழாய்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த திட்டத்தின் மொத்த வடிவமும், செயல்பாடுகளும் என்னால் உருவாக்கப்பட்டது. அதை நான் முடித்தே தீருவேன்.
அதுமட்டுமா... பெருந்துறை தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் எனது ரத்தத்தை வியர்வையாக சிந்தி பணிகள் செய்து இருக்கிறேன். சாலைகளின் நடுவில் நின்றுகொண்டிருந்த அத்தனை மின்கம்பங்களையும் சாலையோரங்களுக்கு மாற்றி இருக்கிறேன். மின்சாரத்துறையில் ஒரு மின்கம்பத்தை மாற்றுவது கூட எத்தனை சிரமம் என்பதும், எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதும் அனைவருக்கும் தெரியும். பெருந்துறை நகரம் முழுவதும் அனைத்து மின்கம்பங்களையும் மாற்றுவது என்றால் எத்தனை சிரமப்பட்டு இருப்பேன்.
அ.தி.மு.க.வில் இருக்கிறேன்
இப்போதும் நான் அ.தி.மு.க.வில் இருக்கிறேன். எனது சட்டைப்பையில் அம்மா ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்கள்தான் உள்ளன. நான் கட்சிக்கு எதிராக செயல்படவோ, வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ, கட்சி மாறவோ இல்லை. என்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய பணி இருக்கிறது. இந்த தொகுதிக்கு யார் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும். நான் சாதாரண அரசியல்வாதியாக இல்லாமல், சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதியாக வித்தியாசமாக அரசியல் செய்து வருபவன். பெருந்துறை தொகுதிக்கு யார் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் பலரும் இருந்தனர்.

Next Story