திம்பம் மலைப்பாதையில் திரும்பமுடியாமல் நின்ற லாரி- போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் திரும்பமுடியாமல் நின்ற லாரி- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 March 2021 11:13 PM GMT (Updated: 18 March 2021 11:13 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
தமிழகம்-கர்நாடக மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்து சாலையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. குறுகிய வளைவுகளை கொண்டதால் திம்பம் மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாரம் தாங்காமல் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகிறது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
திரும்ப முடியாமல் நின்ற லாரி
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவில்பட்டிக்கு மர  பாரம் ஏற்றிக்கொண்டு் லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் காலை 9 மணி அளவில் சென்றபோது திரும்ப முடியாமல் நின்றது. மேற்கொண்டு டிரைவரால் லாரியை இயக்க முடியவில்லை.
இதனால் அந்த வழியாக மோட்டார்சைக்கிள், கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மற்ற வாகனங்களால் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.
அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. லாரி திரும்ப முடியாமல் நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story