தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது


தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
x
தினத்தந்தி 22 March 2021 2:13 AM GMT (Updated: 22 March 2021 2:13 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து தலை முடி ‘விக்’கில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த ரூ.2½ கோடி தங்கம் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் மற்றும் சார்ஜா விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த மெகபூப் அக்பர் அலி (வயது 35), சென்னையை சேர்ந்த சுபைர் உசேன் (25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களின் தலைமுடி வித்தியாசமாக இருந்ததால் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர்கள், தங்களது தலையின் மேல் பகுதியில் முடியை சவரம் செய்து, அதற்கு பதிலாக ‘விக்’ வைத்து இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த ‘விக்’கை பிரித்து பார்த்தபோது, ‘விக்’கின் அடியில் கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 595 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அகமதுல்லா (22), சேலத்தை சேர்ந்த சந்தோஷ் செல்வம் (33), சென்னையை சேர்ந்த அப்துல்லா (35) ஆகியோரும் இதே பாணியில் தலை முடி ‘விக்’கில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.96 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 80 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் துபாயில் இருந்து வந்த திருச்சியை சேர்ந்த பாலு கணேசன் (24) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.26 லட்சம் மதிப்புள்ள 622 கிராம் தங்கத்தையும், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ரூ.43 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 933 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

துபாயில் இருந்து வந்த விழுப்புரத்தை சேர்ந்த அன்பழகன் (24) என்பவர் காலுறை(சாக்ஸ்) மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.62 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 330 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த தமீம் அன்சாரி (25) என்பவரையும் மடக்கி பிடித்தனர்.

அதேபோல் சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல வந்த 4 பேரின் தலைமுடி ‘விக்’குகளில் மறைத்து கடத்திச்செல்ல முயன்ற ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட வெளிநாட்டு பணத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகளின் கடும் நடவடிக்கைகளால் கடத்தல் கும்பல் தற்போது புதுவிதமாக தலைமுடி ‘விக்’கில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் புதிய விதமான கடத்தலையும் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 500 கிராம் தங்கம், ரூ.24 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story