மதனகோபால சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்


மதனகோபால சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 23 March 2021 12:05 AM GMT (Updated: 23 March 2021 12:13 AM GMT)

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று தொடங்கியது. 28-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பங்குனி உத்திர திருவிழாவை கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி நடத்திக்கொள்ள நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் திடீரென்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா 2 நாட்கள் தாமதமாக நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

பிராமணர் சங்கம் சார்பில் நடந்த கொடி ஏற்ற நிகழ்ச்சியையொட்டி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபாலசுவாமியை, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருள செய்து கொடிமரத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி ஏற்ற உற்சவத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில் பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். 

விழாவில் பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அய்யர், பொதுச்செயலாளர் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் சஞ்சீவிராவ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து காலையில் ஹம்ச வாகனத்திலும், மதியம் சிம்ம வாகனத்திலும் பிரகார உலா நடந்தது. இரவில் அனுமந்த வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) பல்லக்கில் சேஷவாகனத்தில் புறப்பாடு, நாளை (புதன்கிழமை) உதயகருட சேவை, வெள்ளிகருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 25-ந்தேதி யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் 26-ந்தேதி மாலை நடக்கிறது. அன்று இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும், 27-ந்தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவில் குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது.

28-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 29-ந் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தாவரணம் நிகழ்ச்சி, 30-ந் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவில் புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா, 31-ந்தேதி காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவம், ஏப்ரல் 1-ந் தேதி காலை மஞ்சள் நீர், இரவில் விடையாற்றி விழா, ஏப்ரல் 4-ந் தேதி திருத்தேர் 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமும், இரவில் பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர், கோவில் செயல் அலுவலர் அனிதா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

Next Story