ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை


ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 1 April 2021 6:07 PM GMT (Updated: 1 April 2021 6:07 PM GMT)

தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை,

தேர்தல் நாளன்று பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியத்துடன் விடுப்பு

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வருகிற 6-ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், தோ்தல் நாளன்று அவா்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும். அந்த விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தோ்தல் தினமான 6-ந்தேதி அன்று மேற்படி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை சிவகங்கை, காஞ்சிரங்கால் அரசினிப்பட்டி ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் (அமலாக்கம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story