மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 1 April 2021 7:29 PM GMT (Updated: 1 April 2021 7:29 PM GMT)

தரகம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

தரகம்பட்டி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள சின்னம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சிவநாதன் (வயது 21). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டியப்பட்டயில் இருந்து சின்னம்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். 
அப்போது எதிரே வீரணம்பட்டியை சேர்ந்த மருதமுத்து மகன் மணிவேல் (35) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சின்னம்பட்டியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வீரணம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தரகம்பட்டி அருகே சின்னாம்பட்டி மேல்புறம் வந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. 
வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்
இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவநாதன், மணிவேல் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சிவநாதனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவநாதனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  
 இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிவேல் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாலவிடுதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story