10 ஆண்டுகள் பயனற்று கிடக்கிறது மாற்றத்தை தாருங்கள், மணப்பாறையை வளர்ச்சியடைய செய்கிறேன் தி.மு.க. கூட்டணி ம.ம.க. வேட்பாளர் அப்துல் சமது பேச்சு
10 ஆண்டுகள் பயனற்று கிடக்கிறது மாற்றத்தை தாருங்கள், மணப்பாறையை வளர்ச்சியடைய செய்கிறேன் தி.மு.க. கூட்டணி ம.ம.க. வேட்பாளர் அப்துல் சமது பேச்சு.
மணப்பாறை,
மணப்பாறை தொகுதி தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகின்ற நிலையில், மணப்பாறை நகரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்து பேசியதாவது:-
மணப்பாறை சட்டமன்ற தொகுதி என்பது பின்தங்கிய பகுதி தான். விவசாயம் சார்ந்து வாழ்கின்ற மக்கள் தான் அதிகம். இதேபோல் தொழிற்சாலைகளோ பெரிய அளவிலான நிறுவனங்களோ இல்லை. புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கூட இல்லை. இதனால் அந்த தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு கடனுதவி பெறுவதில் கூட சிரமம் உள்ளது. இதுமட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மணப்பாறை தொகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு அந்த திட்டத்தின் மூலம் தான் மக்கள் தற்போது வரை குடிநீரை பெற்று வருகின்றனர்.ஆனால் அந்த திட்டம் கொண்டு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகின்றது. ஆனால் அதை சரிசெய்வதற்கு கூட இந்த அரசால் முடியவில்லை. எனவே இந்த அரசு மட்டும் அல்ல இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. 10 ஆண்டுகளாக இருந்து என்ன பயன்? ஏதாவது பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? கல்லூரி என்ன ஆனது? இவற்றிற்கெல்லாம் விடை கிடைக்க வேண்டும் என்றால் மக்கள் நலன்பயக்கும் திட்டங்கள் எல்லாம் கிடைத்து மணப்பாறை தொகுதி மேம்பட வேண்டும் என்றால் வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் பட்டனை அழுத்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி மணப்பாறை என்று மாற்றிக் காட்டிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story