கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7,528 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  7,528 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 4 April 2021 4:47 PM GMT (Updated: 4 April 2021 4:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 7,528 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 
இந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் என 7,528 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாழுவது குறித்த 3-வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி தொகுதி

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள 416 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 1,996 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்படுத்தும் விதம், வாக்குப்பதிவு முடிந்தவுடன் சீல் வைப்பது மற்றும் வாக்குச்சாவடியில் செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து தேர்தல் மண்டல அலுவலர்கள் செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். 

உளுந்தூர்பேட்டை

அதேபோல் ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,796 பேருக்கும், சங்கராபுரம் தொகுதியில் உள்ள 372 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 1,784 வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சங்கராபுரத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளிலும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள 407 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 1,952 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


Next Story