4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு


4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 4 April 2021 7:17 PM GMT (Updated: 4 April 2021 7:17 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
துணை ராணுவ படை
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் மேற்பார்வையில் 1900-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 
இதுதவிர 420 பேர் கொண்ட 6 துணை ராணுவ படையினர் ராமநாதபுரம் வந்துள்ளனர். இவர்களில் 320 பேர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மீதம் உள்ள 100 பேர் வாகன சோதனை உள்ளிட்ட பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவினருடன் பணிகளில் ஈடுபடுகின்றனர். போலீஸ் பட்டாலியனில் இருந்து 80 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இருந்து 420 பேரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 பாதுகாப்பு
மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து பயிற்சி போலீசார் 50 பேர் வந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மாணவர் படையை சேர்ந்த 320 பேரும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 350 பேரும், கர்நாடாகவில் இருந்து வந்துள்ள ஊர்க்காவலர் படையினர் 100 பேரும், முன்னாள் படைவீரர்கள் 271 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 3 ஆயிரத்து 439 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும். 
வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அங்கு சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேர பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும். தேர்தலை அமைதியாகவும், முழுமையாகவும் நடத்தி முடிக்க மாவட்ட காவல்துறை முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் யாரேனும் ஈடுபட்டால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். 
இவ்வாறு கூறினார்.

Next Story