குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு


குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 5 April 2021 3:29 PM GMT (Updated: 5 April 2021 3:29 PM GMT)

மூலைக்கரைப்பட்டி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.

இட்டமொழி, ஏப்:
மூலைக்கரைப்பட்டி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள். 

8-ம் வகுப்பு மாணவி

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியை அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தெருவில் வசித்து வருபவர் கலைச்செல்வன், விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். 2-வது மகள் ஆண்ட்ரியா (வயது 13), முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் பிள்ளையார்குளத்தில் உள்ள குளத்தில் கலைச்செல்வனின் பிள்ளைகளும் மற்றும் அதே ஊரை சேர்ந்த வேறு சில பிள்ளைகளும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் அருகே கலைச்செல்வன், கலைச்செல்வி ஆகியோர் விவசாய பணிகள் செய்து கொண்டிருந்தனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

இந்த நிலையில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகள் அனைவரும் வெளியே வந்து விட்டனர். ஆனால் ஆண்ட்ரியா மட்டும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாள். இந்த நிலையில் திடீரென அவள் தண்ணீரில் மூழ்கினாள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், குளத்துக்குள் இறங்கி அவளை தேடினர். அப்போது அவளை பிணமாக தான் மீட்டனர். அவளது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமி ஆண்ட்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளத்தில் மூழ்கி பள்ளிக்கூட மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story