வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி உள்பட 5 பேர் கைது


வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2021 8:16 PM GMT (Updated: 5 April 2021 8:16 PM GMT)

தக்கலை அருகே வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பத்மநாபபுரம், 
தக்கலை அருகே வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறக்கும்படைக்கு ரகசிய தகவல்
தக்கலை அருகே பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அகஸ்தீஸ்வரம் வேளாண்மை இயக்குனர் சுரேஷ் தலைமையில் பறக்கும்படையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
 அதிகாரிகளை கண்டதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றனர். அப்போது பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து மடக்கிபிடித்தினர்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளான தக்கலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது46), பத்மநாபபுரம் கீழகுளத்தை சேர்ந்த நாகராஜ் (51), ராஜா (48), சுரேஷ்குமார் (47), தக்கலை ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த கீதா (42) என்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூ.89 ஆயிரத்து 500 தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன் பிடிபட்ட 5 பேரையும் தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். 
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

Next Story