புதுச்சேரியில், அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படும்; கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
புதுச்சேரியில், அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மொழியியல் மற்றும் கலை நிறுவனம்
சுதந்திர போராட்ட வீரர் ஜெகஜீவன் ராமின், பிறந்தநாள் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, புதுச்சேரி கவர்னர்(பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், லாசுபேட்டையில் உள்ள ஜெகஜீவன் ராம் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, புதுச்சேரியின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், தாகூர் கலைக் கல்லூரியில் உள்ள மொழியியல் மற்றும் கலை நிறுவனத்தை தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.
அரசு ஆணைகள் தமிழில்...
இதையடுத்து, தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ‘‘புகழ்பெற்ற நிறுவனமான மொழியியல் மற்றும் கலை நிறுவனம் தமிழ் மொழிக்கு நிறைய தொண்டு புரிந்துள்ளது. இங்கு பல வெளிநாட்டவர்கள் வந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். பல அரிய ஆராய்ச்சி நூல்கள் இங்கு உள்ளன. அவைகளை உலகம் அறிய மின்னணு நூல்களாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இதன் கட்டமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், கோரிக்கையை ஏற்று அரசு ஆணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
நலிவடைந்த தமிழ் கலைஞர்களுக்கு உதவி புரியவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், அவர்களை தமிழ் புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களின் போது ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று துறை செயலாளரை, தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story