பெரும்பாலான கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன


பெரும்பாலான கடைகள் அடைப்பு  சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
x
தினத்தந்தி 6 April 2021 6:29 PM GMT (Updated: 6 April 2021 6:29 PM GMT)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

விழுப்புரம்

வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், பொது, தனியார்த்துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகள், கடைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் வியாபாரிகள் அனைவரும் தாங்கள் மற்றும் தங்கள் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கடைகளுக்கு விடுமுறை விட்டிருந்தனர்.

கடைகள் அடைப்பு

இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு டீக்கடைகள், மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. விழுப்புரம் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க.சாலை, காமராஜர் சாலை, கே.கே.சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

இதேபோல் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, வானூர், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், மயிலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் பெட்டி கடைகள், மளிகை, ஜவுளி மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் நகரின் பிரதான சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான மருந்துகடைகள், பால்பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. 
அதேபோல் சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.  மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. அதிலும் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே பயணிகள் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இரவு நேரத்தில் சில மளிகை மற்றும் ஓட்டல்கள் திறந்து இருந்ததை காண முடிந்தது.

Next Story