சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 7:29 PM GMT (Updated: 6 April 2021 7:29 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது

மானாமதுரை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது. சிவகங்கை மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள 4 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அங்கு இருந்த சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் பயன்படுத்தி ஓட்டு போட்டனர். அமைச்சர் பாஸ்கரன் சிவகங்கையை அடுத்த தமராக்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிவகங்கை மருதுபாண்டிய நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் தேவகோட்டை அடுத்த நாகாடியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கை செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் குணசேகரன் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் வாக்களித்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகா ரமேஷ் தேவகோட்டை முப்பையூரை அடுத்த புள்ளியேந்தல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் ஜோசப் திருப்பத்தூரில் இளங்குடியில் வாக்களித்தார். 
சிவகங்கை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் அன்பரசன் சிவகங்கையை அடுத்த அரசனூரிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ. அவரது சொந்த ஊரான அரளிக்கோட்டையில் வாக்கினை பதிவு செய்தார். மேலும் அவரது தாயார் கருப்பாயி அம்மாள் (வயது 90) மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து வந்து வாக்கு பதிவு செய்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் காட்டாம்பூர் அரசு பள்ளியில் வாக்களித்தார். அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. உமாதேவன் கம்பனூர் அரசு பள்ளியில் வாக்களித்தார்.
மானாமதுரை
மானாமதுரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் தனது சொந்த ஊரான கீழநெட்டூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அ.ம.மு.க. வேட்பாளர் மாரியப்பன் கென்னடி ஆதனூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்களித்தார். தி.மு.க. வேட்பாளர் தமிழரசி மதுரை மாவட்டத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி
காரைக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் வாக்கு அளித்தார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வாக்களித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி பாண்டி கண்ணங்குடி ஒன்றியம் கிளாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ராசகுமார் காரைக்குடி ஆலங்குடி யார் வீதியிலுள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார்.

Next Story