கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு


கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2021 7:40 PM GMT (Updated: 6 April 2021 7:40 PM GMT)

கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர்,ஏப்.7
கீரனூர் ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி (வயது 80). இவர் ஓட்டு போடுவதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு அடையாள அட்டையை சரிபார்த்த தேர்தல் அலுவலர்கள் நீங்கள் இறந்து விட்டதாகவும் ஓட்டு போட முடியாது எனவும் திருப்பி அனுப்பினர். வெளியே வந்த மூதாட்டி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீரையாவிடம்  தெரிவித்தார். உடனடியாக அவர் குளத்தூர் தாசில்தார் ரெங்கநாயகியிடம் புகார் கூறினார். இதுகுறித்து விசாரித்தபோது, லட்சுமியின் கணவர் ஆறுமுகம் இறந்து 4 ஆண்டு ஆகியுள்ளநிலையில் வாக்காளர்கள் பட்டியல் சரி பார்க்கும் போது அதில் மூதாட்டி லட்சுமி இறந்துவிட்டதாகவும், அவரது கணவர் ஆறுமுகம் உயிரோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அந்த மூதாட்டி வாக்குச்சாவடி அருகில் ஒரு மரத்தடி நிழலில் காத்துக் கிடந்தார். அவருக்கு உணவு பொருட்களை அங்கு இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் வாங்கி கொடுத்தனர். மாலை 5 மணி அளவில்வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதேபோல் ஏகப்பட்ட புகார்கள் உள்ளதாகவும் எனவே அந்த மூதாட்டி ஓட்டுப் போட அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்த மூதாட்டி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.


Next Story