8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது- பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்


8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது- பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 7 April 2021 12:31 AM GMT (Updated: 7 April 2021 12:31 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு்ப்போட்டனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு்ப்போட்டனர்.
சத்தியமங்கலம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.
பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வெயிலில் நிற்பதை தடுப்பதற்காக சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் அருகே ஒரு வாக்குச்சாவடி முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டு, அவர்களை வரவேற்கும் விதமாக வாழை மரங்கள் கட்டியிருந்தனர்.
பெண்கள் ஆர்வத்துடன்...
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் 6 மற்றும் 7-வது வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக காலை 9.30 மணி அளவில் நீண்ட வரிசையில் அதிக அளவில் பெண்கள் காத்திருந்தார்கள். 22-வது வார்டுகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளிலும் ஏராளமான பெண்கள் காத்து நின்று ஓட்டு போட்டனர்.இது தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் பெண்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பல வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடுவதற்காக முதியவர்களை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்து வந்தார்கள். சிலர் தங்களது உறவினர்களின் உதவியுடன் கம்பு ஊன்றியபடி வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்கை பதிவு செய்தனர். ஆண்களை விட பெண்களே சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். 
சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 77 வயதான ஒரு மூதாட்டி சக்கர நாற்காலியில் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்.
சிவகிரி
சிவகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்கள் நேற்று காலை 7 மணி முதல் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்தனர். சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் சமூக இடைவெளிவிட்டு நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.
வாக்குச்சாவடியின் முகப்பில் உடல் வெப்ப பரிசோதனை செய்து கைக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கையுறைகள் அணிந்த பின்பே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உடல் நலம் சரியில்லாத பெண் ஒருவர் உறவினர் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டுப்போட்டார்.
கோபி
கோபி அருகே உள்ள மொடச்சூர், ஓலப்பாளையம், ஓடக்காட்டூர், கொளப்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பெண்கள் ஆர்வமாக வரிசையாக நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சில வாக்குச்சாவடி மையங்களில் வயதான மூதாட்டிகளை சக்கர நாற்காலி மூலம் வாக்களிக்க உறவினர்கள் அழைத்து வந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கம்மாள். 95 வயதான இவர் சக்கர நாற்காலியில் தவுட்டுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அவர் கூறும்போது, ‘ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்கு அளித்து வருகிறேன். அதே போல் இந்த தேர்தலிலும் நான் தபால் வாக்கு போடாமல் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்து இருந்தேன். அதன்படி அவர்கள் என்னை சக்கர நாற்காலியில் அமர வைத்தப்படி வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்து வந்தனர்’ என்றார்.
கொடுமுடி
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனர். அனைத்து வாக்கு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு பணியாளர்கள் மூலம் சானிடைசர் மற்றும் ைகயுறைகள் வழங்கப்பட்டன. முக கவசங்களும் வழங்கப்பட்டன. முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நேரடியாக வாக்குப்பதிவு செய்யும் இடத்துக்கே அழைத்துச் செல்லப்பட்டனர். 
முதல் முறை வாக்காளர்கள் உற்சாகத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அனைத்து வாகனங்களும் வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டருக்கு தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இளைஞர்களும், முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர்.
சென்னிமலை
சென்னிமலை ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 6 ஊராட்சிகளும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 6 ஊராட்சிகளும் அடங்கி உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நாளான நேற்று காலை 7 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. புதிய வாக்காளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் முக கவசம் அணிந்து வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.  அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க வாக்காளர்களின் வசதிக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. குமரன் சதுக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச்சாவடியின் நுழைவு வாயில் முதல் வாக்குச்சாவடியின் உள்புறம் வரையிலான சுவர்களில் வண்ண துணிகள் கட்டப்பட்டும் மற்றும் பல வண்ண காகிதங்களை கொண்டும், தரை விரிப்புகள் போடப்பட்டு் இருந்தது. இந்த வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்த வாக்காளர்கள் தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைத்ததாக தெரிவித்தனர்.
98 வயது முதியவர்
பெருந்துறை திருவேங்கடம்பாளையம் தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் 98 வயது முதியவர் ராமசாமி கவுண்டர். இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி களிலும் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 

Next Story