வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: வியாசர்பாடியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் இளம்பெண் புகாரால் பரபரப்பு


வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: வியாசர்பாடியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் இளம்பெண் புகாரால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2021 5:10 AM GMT (Updated: 7 April 2021 5:10 AM GMT)

வியாசர்பாடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகள் பதிவானதில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்ட புகாரால் சுமார் 2 மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது.

சென்னை, 

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பள்ளத்தெருவில் அமைந்துள்ள அனந்தநாயகி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வந்தது. பகல் ஒரு மணி அளவில் இளம்பெண் ஒருவர் ஓட்டு போட்டபோது எந்திரத்தில் வாக்கு பதிவாகவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தேர்தல் அலுவலரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதனை செய்வதற்காக வேறு ஒரு பட்டனை அழுத்தியபோது வாக்கு பதிவாகி விட்டதாக தெரிகிறது.

அந்தப்பெண் நான் ஓட்டு போடலாமா என்று கேட்டார் அதற்கு அந்த அலுவலர், நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்கள் என்று கூற அதற்கு அந்த பெண் நான் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்க வந்திருந்தேன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வேலை செய்யாததால் உங்களிடம் தெரிவித்தேன், நீங்கள்தான் மற்றொரு பட்டனை அழுத்தினீர்கள், இப்போது வாக்கு பதிவாகி விட்டது செல்லுங்கள் என்றால் நான் எப்படி செல்வேன். எனக்கு என் ஓட்டு வேண்டும் என்றார்.

கேள்விகுறி

மேலும் இதுகுறித்து வாக்குச்சாவடியில் இருந்த ஏஜென்டுகளிடம் அவர் தெரிவித்தார். உடனே ஏஜென்டுகள் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றும் இதனால் வாக்குப்பதிவில் சந்தேகம் இருப்பதாகவும் அங்கு உள்ளவர்கள் குற்றம்சாட்டினர்.

அந்த பெண்ணுக்கு முன்பாக சுமார் 300 பேர் ஓட்டு போட்டனர். இதனால் அந்த வாக்குகளின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியானது.

இதுதொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் மேற்பார்வையாளர் கரன் சிங் நேரில் வந்து விசாரணை நடத்தினார். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட பெண் தேர்தல் அலுவலரை பணியில் இருந்து விலக்கி விட்டு அங்கு மற்றொரு அலுவலரை பணியில் அமர்த்தினர்.

பின்னர் காலை முதல் மதியம் ஒரு மணி வரை பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிறுத்தி அதற்கு பதிலாக புதிய மின்னணு எந்திரத்தை வைத்து பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவை மீண்டும் தொடங்கினர்.

மறுவாக்குப்பதிவா?

இதனால் 2 மணிநேரம் வாக்குபதிவில் தடை ஏற்பட்டது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு மீண்டும் அந்த வாக்கை வழங்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு எழுதி கொடுத்தார். ஆனாலும் அவர் ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் புகார் கொடுத்திருந்தார்.

இதற்கிடையே ஏற்கனவே பழுதான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான 300 வாக்குகளின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை. எனவே இங்கு மறுவாக்கு பதிவு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Next Story