தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் பூட்டி சீல் வைப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் பூட்டி சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 April 2021 1:16 PM GMT (Updated: 7 April 2021 1:16 PM GMT)

தூத்துக்குடியில், 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
சட்டமன்ற தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அதற்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பரிசீலனை
நேற்று காலையில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்கு சதவீதத்தில் 15 சதவீதம் கூடுதலாகவோ அல்லது 15 சதவீதம் குறைவாகவோ பதிவான வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஏதேனும் பிரச்சினை நடந்து இருந்தால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனையின் போது, தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார் (ஓட்டப்பிடாரம்), சுசில் குமார் படேல் (திருச்செந்தூர்) சுவின் பன்சால் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சீல் வைப்பு
அதன்பிறகு அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தனி அறையில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. தொடர்ந்து கட்சி வேட்பாளர் அல்லது முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அந்த அறையில் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story