வாணியம்பாடியில் வைக்கப்பட்டுள்ள 4 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு


வாணியம்பாடியில் வைக்கப்பட்டுள்ள 4 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 3:23 PM GMT (Updated: 7 April 2021 3:23 PM GMT)

வாணியம்பாடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாக்கு எண்ணிக்கை மையம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்படுகிறது. 

நேற்றுமுன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 1,371 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. நேற்று  அதிகாலை மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களையும் தனித் தனி அறையில் வைத்து அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 
3 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜெயின் மகளிர் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியதாவது:-

 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்திற்கு 3 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் 80 பேர், தமிழ்நாடு சிறப்பு போலீசார் 35 பேர், அதிரடிப் படையினர் 40 பேர், மாவட்ட போலீசார் 30 பேர் என மொத்தம் 185 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிகும் காட்சிகளை 24 மணிமணி நேரமும் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எந்திரங்களை கண்காணிக்க பாதுகாப்பு பணிக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மைய அருகே அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2 தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story