அதிகரிக்கும் நோய் தொற்று விழுப்புரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பொதுமக்கள் பீதி


அதிகரிக்கும் நோய் தொற்று விழுப்புரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 7 April 2021 4:57 PM GMT (Updated: 7 April 2021 4:57 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

விழுப்புரம், 

கொரோனா தொற்று அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்நோயின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாக இருந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணாக உயர்ந்துள்ளது.

52 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,669 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 113 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 200 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் 52 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் பீதி

இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,721 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 14 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,370 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக நாளுக்கு நாள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மாவட்ட மக்களிடையே பெரும் பீதியடைய செய்துள்ளது.
சுகாதாரத்துறை அறிவுரை
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், அவ்வப்போது சானிடைசர் திரவத்தால் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், கடைவீதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றியே பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story