வெளிமாநில போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து கடலூர் வந்த போலீசார் நேற்று சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்பி சென்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் (தனி), திட்டக்குடி (தனி), நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது.
அதன் அடிப்படையில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து, 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 4-ந் தேதி கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சொந்த ஊர் புறப்பட்டனர்
மேலும் அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் ரோந்து பணியும் மேற்கொண்டனர். இதையடுத்து தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததையடுத்து, அவர்கள் நேற்று கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,500 போலீசாரும் நேற்று மதியம் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story