ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 5:43 PM GMT (Updated: 7 April 2021 5:43 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

4 தொகுதிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 788 வாக்காளர்கள் உள்ளனர். 
இவர்களில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 698 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்திருந்தனர். 

அதன்படி அரக்கோணம் தொகுதியில் 74.89 சதவீதமும், சோளிங்கர் தொகுதியில் 80.09 சதவீதமும், ராணிப்பேட்டை தொகுதியில் 77.24 சதவீதமும், ஆற்காடு தொகுதியில் 79.62 சதவீதமும் என பதிவாகின.
இந்த நிலையில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ‌சீல் வைத்து, வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. 
பின்னர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எந்திரங்கள் தொகுதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டது.

கலெக்டர் பார்வையிட்டார்

இப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அறைக் கதவுகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நாளான மே -2 ந் தேதி வரை இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Next Story