பல்கலைக்கழக சிறப்பு வார்டை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்


பல்கலைக்கழக சிறப்பு வார்டை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 April 2021 6:01 PM GMT (Updated: 7 April 2021 6:01 PM GMT)

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல்கலைக்கழக சிறப்பு வாா்டை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைநகர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை தினசாி கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினந்தோறும் 40-க்கும் மேற்பட்டோா் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 362 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 79 போ் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சுகாதார பணிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள டைமண்ட் ஜூப்ளி விடுதியில் உள்ள சிறப்பு வார்டிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது இந்த விடுதியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டைமண்ட் ஜூப்ளி விடுதியை தூய்மைப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி நேற்று அண்ணாமலைநகர் சிறப்பு நிலை பேரூராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், கொரோனா கவச உடைகளை அணிந்துகொண்டு விடுதியில் உள்ள அறைகள் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விடுதி முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.  

Next Story