மலர் கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா


மலர் கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா
x
தினத்தந்தி 7 April 2021 6:43 PM GMT (Updated: 7 April 2021 7:06 PM GMT)

குன்னூரில் மலர் கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்கா தயாராகி வருகிறது.

குன்னூர்,

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களைகட்டும். அப்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படும். அதில் கடைசி நிகழ்ச்சியாக குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கோடை சீசன் தொடங்க உள்ளதையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் பூங்காவில் புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து அவற்றை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது பூங்காவில் 29 வகைகளை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்பட்டவை ஆகும். கோடை வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

இது தவிர சால்வியா, மேரிகோல்டு, ஸ்வீட் வில்லியம் போன்ற 152 ரக மலர் செடிகளும் பராமரிக்கப்படுகின்றன. தற்போது அனைத்து செடிகளும் நன்றாக வளர்ந்து பூத்துக்குலுங்க தயார் நிலையில் உள்ளன. 

அவை கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் பூங்காவை கண்டு ரசிக்கும் வகையில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய பாதை அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story