மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு: மதுபோதையில் தகராறு; வாலிபர் கத்தியால் குத்தி கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் அஜித்(வயது 26). நேற்று மாலை இவரும் இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவிகாந்தி, திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் சின்னராஜ் ஆகிய 3 பேரும் அருளம்பாடி முஸ்குந்தா நதி அருகே உள்ள ஒரு கோவில் பின்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் அஜித் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அருகில் சின்னராஜ் குடிபோதையில் உளறிக்கொண்டே இருந்தார்.
இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து இறந்து கிடந்த அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் இருந்த சின்னராஜை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது அங்கே சஞ்சீவிகாந்தியை காணவில்லை. இதனால் இவர் தான் அஜித்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே தலைமறைவாக உள்ள சஞ்சீவிகாந்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் முன்விரோத தகராறில் அஜித் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story