7 தொகுதிகளிலும் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்


7 தொகுதிகளிலும் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்
x
தினத்தந்தி 7 April 2021 7:38 PM GMT (Updated: 7 April 2021 8:11 PM GMT)

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
மொத்தமுள்ள 16 லட்சத்து 70 ஆயிரத்து 996 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 542 பேர். பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 57 ஆயிரத்து 262 பேர். மொத்த வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 720 பேர் அதிகம் உள்ளனர். 

இந்தநிலையில் 73.69 ஆக பதிவாகி உள்ளன. இதில் ஆண்களின் வாக்குப்பதிவு சதவீதம் 73.66 ஆகும். பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதம் 73.79 ஆகும்.  பதிவாகியுள்ள வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 96 ஆயிரத்து 754. பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 32 ஆயிரத்து 138 பேர். 32,354 பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட அதிகமாக வாக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜபாளையம் தொகுதியில் 5,054 பெண் வாக்காளர்கள் கூடுதலாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 4,788 பெண் வாக்காளர்கள் அதிகமாகவும், சாத்தூர் தொகுதியில் 6,559 பெண் வாக்காளர்கள் கூடுதலாகவும், சிவகாசி தொகுதியில் 2,930 பெண் வாக்காளர்கள் கூடுதலாகவும், விருதுநகர் தொகுதியில் 6,464 வாக்காளர்கள் கூடுதலாகவும், அருப்புக்கோட்டை தொகுதியில் 4,025 வாக்காளர்கள் அதிகமாகவும், திருச்சுழியில் 6,464 கூடுதலாகவும் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூர் தொகுதியில் 6,559 பெண் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சிவகாசி தொகுதியில் 2,930 பெண் வாக்காளர்களும் அதிகமாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் தான் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடியவர்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறும்நிலை உள்ளது. இவர்கள் ஏற்கனவே முன்னணியில் உள்ள அரசியல் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து இருப்பார்களா அல்லது இளைஞர்களை கவரும் வகையில் பிரசாரம் மேற்கொண்ட அரசியல் கட்சியினருக்கு வாக்களித்து இருப்பார்களா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இவர்களது வாக்குகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, தோல்வி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story