சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்


சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு சீல்
x
தினத்தந்தி 7 April 2021 8:08 PM GMT (Updated: 7 April 2021 8:08 PM GMT)

சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை தேர்தல் அமைதியாக நடந்தது. 2 ஆயிரத்து 741 வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து மொத்தம் 76.91 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
இந்த வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு மேல், அந்தந்த மண்டல அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியாக பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து வாங்கவே நேற்று அதிகாலை ஆனது.
வழக்கமாக அதிகாலைக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படும். ஆனால், இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திரும்ப எடுத்துச்செல்வது மிகவும் தாமதமானது.
பாதுகாப்பு அறை
நேற்று காலை 10 மணிவரை வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கும் பணி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று பகலில் அனைத்து அறைகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி வைக்கப்பட்டன. ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டன. அந்தந்த வாக்குப்பதிவு மையங்களையொட்டி அமைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஒவ்வொரு வாக்குப்பதிவு எந்திரமும் வைக்க அடையாளமிடப்பட்ட இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டன. வரிசை எண், பட்டியல் எண்கள் சரிபார்க்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு எந்திரத்திலும், இந்த வாக்குச்சாவடி தொடர்பான வாக்காளர் பட்டியல் விவரங்களும் சேர்த்து வைக்கப்பட்டன.
சீல் வைப்பு
பின்னர் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, தேர்தல் பார்வையாளர்கள் சவ்தீப் ரின்வா, அடோனுசாட்டர்ஜி ஆகியோர் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையிலும், அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
கோபி கலை அறிவியல் கல்லூரி
இதுபோல் கோபி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அந்த அறை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தேர்தல் மேற்பார்வையாளர் நர்போ வாங்கிடி பூட்டியா முன்னிலையில் ஆர்.டி.ஓ. பழனிதேவி மேற்பார்வையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
பாதுகாப்பு
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வாக்கு எண்ணும் நாளான மே 2-ந்தேதி வரை 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வெளிப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளும் கண்காணிப்பு செய்யப்படும்.
அனுமதி இல்லாத எந்த நபரும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவப்படையினரும் உள்ளனர்.

Next Story